ஓ.சியில் சிங்கப்பூர் செல்ல வழி!

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

Feel Good

இன்றைக்கு பதிவுலகுக்கு வெளியே பதிவுலகைப் பற்றி இருக்கும் ஒரு மறைமுக அறைகூவல், பதிவர்கள் எனப்படும் இணைய எழுத்தாளர்களால் ஆக்கப்பூர்வமாக எதுவும் எழுத முடியுமா என்பதே. முன்னோடி எழுத்தாளர்கள் முதல் பொதுத்தள ஊடகங்கள் வரை இந்தக் கேள்வியை மறைமுகமாக கேட்டுவருகின்றனர் மேலும் பதிவர்களின் எழுத்துத் திறன் பற்றி பொதுமக்களிடம் பேசத் தயங்குகின்றனர்.அது தவிர பொதுமக்களிடையே பதிவுலகம் பற்றிய அறிமுகங்கள் இல்லாததற்கு முதன்மைக் காரணி கணினி மற்றும் இணைய இணைப்பு அனைவரிடம் இல்லை என்பதே. இவை வெளிப்படையான காரணங்கள் என்றாலும், இணையத்தில் எழுதுகிறேன், இணைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று பிறரிடம் சொன்னால் அவர்கள் உடனடியாக ஐஆர்சி எனப்படும் இணைய உரையாடியில் வெட்டிப் பேச்சு பேசுவரோ என்றே நினைக்கிறார்கள்.

இணையத்தில் மிகப் பெரிய அளவிலான கருத்தாய்வுகள், விவாதங்கள் நடந்து வருவதும் வெளியில் பலருக்கும் தெரியவில்லை. இணையத்தில் வெளியிடப் பட்டக் கட்டுரைகள் இவை என்று பொதுமக்கள் முன்பு அத்தகைய ஆக்கங்களைக் கொண்டு செல்லும் முயற்சி பெரிய அளவில் மேற்கொள்ளப் படவில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது. பதிவுலகம் பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைத் தவிர இது குறையன்று.

பதிவுலகில் எழுதும் பலரும் மிகவும் சிறப்பான படைப்புகளைத் தருகிறார்கள், பல ஆண்டுகளாக எழுதி வருகிறார்கள், அவர்களின் எழுத்துகளை பொதுமக்கள் முன் கொண்டு செல்ல பொதுத்தள ஊடகங்களையே நாட வேண்டி இருக்கிறது, அத்தகைய ஊடகங்கள் வெளியிட்டால் அது தன் எழுத்துக்கான பரிசு என்று நினைத்து மகிழும் நிலையில் பதிவர்கள் இருக்கிறோம். ஒருவரது எழுத்து பரவலாக ஏற்கப் படுவது ஊடகங்களைக் சார்ந்தது அல்ல, அது முழுக்க முழுக்க ஒருவரின் எழுத்தின், கருத்தின், எழுத்தாழத்தின் தன்மையைச் சார்ந்தது என்பதை நம்மால் உறுதி செய்ய முடியும். அன்றாடம் எழுதுகிறோம், ஆழமான கட்டுரைகளை நம்மாலும் எழுத முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் நாம் சிறந்த எழுத்தாளர் என்கிற உண்மையை நாமே உணர்வோம். அத்தகைய நல்ல வாய்ப்புகளை சிங்கைப் பதிவர்களும், தமிழ்வெளி இணையதளமும் ஏற்படுத்திக் கொடுக்க ஆயத்தமாக இருக்கின்றனர்.

மணற்கேணி 2009

கிணறு வேண்டும் என எண்ணிய பிறகு வெறும் மணல் தான், ஆழமாக தோண்ட தோண்ட அதனுள் நீர் இருப்பதும், சுரப்பதும் நமக்குத் தெரியவருகிறது. நம் எழுத்துக்கள் வெறும் எண்ணங்களாலும், நடப்புகளாலும் எழுதப்படுவதைவிட ஒரு குறிக்கோள் அதாவது ஒரு தலைப்பின் கீழ் எண்ணங்களைக் குவித்து தகவல்களைத் திரட்டி சிறப்பான ஆக்கமாக மாற்றும் போது அது ஒரு படைப்பாகப் போற்றப்படும். பதிவர்களை ஊக்குவித்து, பரிசளித்து, பதிவர்களை மற்றும் ஒரு பரிணாம வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல, சிங்கைப் பதிவர்கள் எடுக்கும் சிறு முயற்சியின் முதல் வித்து மணற்கேணி - 2009.

இந்த ஆண்டுக்கான மணற்கேணி - 2009 போட்டி சூலை 01, 2009 துவங்குகிறது. பதிவர்கள் தங்கள் கருத்தாக்கங்களை போட்டிப் பிரிவுகளுக்கான மின்னஞ்சல் முகவரிகளுக்கு ஆகச்டு 15, 2009 23:59:59 (தமிழக நேரம்)க்குள் அனுப்ப வேண்டும். யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். பதிவு வைத்திருப்பது கட்டாயம் இல்லை என்றாலும் இட்டீடு(விவாதம்) வேண்டி பதிவிடுவதை ஊக்குவிக்க விரும்புகிறோம். இயன்ற வரை தனித்தமிழில் ஆக்கங்களைத் தர முயலுங்கள். முனைப்பிற்கான முயற்சி இது. போட்டி ஆரம்பமாகும் தினத்திற்கு முன்போ அல்லது போட்டி கடைசி தினத்திற்கு பின்போ வரும் கருத்தாய்வுகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ள இயலாது, போட்டிக்கு அனுப்பும் கடைசி நாள் வரை போட்டி கருத்தாய்வு வலைப்பதிவுகளிலே அல்லது எந்த விதத்திலும் எங்கேயும் வெளியாகியிருக்க கூடாது, போட்டி விதிமுறைகள் சூலை 01,2009 அன்று வெளியிடப்படும்...

கருத்தாய்வு போட்டி மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது, ஒவ்வொரு பிரிவிலும் பல தலைப்புகளின் கீழ் நடைபெறுகிறது, இது தொடர்பான விவரங்களை போட்டி தலைப்புகள் என்ற சுட்டியின் கீழ் காணலாம். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒருவர் என மொத்தம் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்து ஒரு கிழமை(வாரம்) தங்கி சுற்றுபயணம் செய்யலாம்

இணைப்பு தர

மணற்கேணி 2009 பற்றிய விளம்பரத்தை உங்கள் தளங்களில் இட்டு இம்முயற்சியை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்

Comments